hi friends...

welcome to my world....hope it makes your stay & reading enjoyable....

Thursday, 19 January 2012

காணாமல் போய்க்கொண்டிருக்கும் குதுகூலப் பொங்கல்....

பொங்கலோ பொங்கல் என்று குதுகூலமாகக் கொண்டாடிய நாட்கள் நினைவில் வந்து போகின்றன. பொங்கல் வந்து விட்டாலே வீடு களைகட்டி விடும். ஒரு மாதம் முன்பே வெள்ளையடிப்பு நடக்கும். வீட்டு சாமான்கள் ஒதுங்க வைக்கப்பட்டு சுத்தம் செய்யப்படும் போது மறந்து போன விளையாட்டுச் சாமான்கள், இதர பொருட்கள் மாட்டும் போது கிடைக்கிற சந்தோஷம்...ஆகா..அனுபவித்தால்தான் தெரியும்...

அது போல், பொங்கலுக்கு முதல் நாள், வாசலில் செம்மண் கோலம் போட்டு அதற்கு பார்டராக சுண்ணாம்பு அல்லது கோலப்போடி போடுவதும், யார் வீட்டுக் கோலம் நல்லா இருக்குங்கிற போட்டியும் பொங்கலுக்கு சுருதி சேர்க்கும். பொங்கல் சாமான்கள் வாங்க சந்தைக்குப் போய் பேரம் பேசி வாங்குவது சுவாரசியம். பொங்கல் அன்று அதிகாலையிலேயே வீடும் தெருவும் களை கட்டி விடும்..அக்கா உங்க வீட்டுல பொங்கல் பொங்குச்சா என்ற பாசமான அக்கம் பக்கத்து வீட்டு விசாரிப்புகள்...(இப்போ எல்லாம் இப்படி விசாரிக்கிறாங்களா?...அக்கம்பக்கதுல யார் இருக்காங்க என்கிறதே பெரும்பாலும் தெரியாமல் போய் விட்டதே...பின் எங்கிருந்து விசாரிக்க!!)

 சூரிய உதயத்தின் போது பூசை நடக்கும். மதியம் பொங்கல் சோறு, சர்க்கரைப் பொங்கல், பல்வகை காய்கறிகள்...சுவையோ சுவை. அடுத்த நாள் மாட்டுப் பொங்கல். வீட்டில் உள்ள மாடுகளுக்குக் கொண்டாட்டமான ஒரே நாள். மாடுகள் குளிப்பாட்டப்பட்டு, அலங்கரிக்கப் பட்டு, பூஜிக்கப்பட்டு, திருஷ்டி கழிக்கப்பட்டு...ஒரே ராஜ உபச்சாரம்தான்.

அடுத்தது, சிறுவீட்டுப் பொங்கல். செம்மண்ணில் காம்பவுண்டுடன் வீடு அமைக்கப்பட்டு பொங்கல் வைக்கப்படும். வாண்டுகளுக்கு உகந்த பொங்கல் இது..(இந்தப் பொங்கல் அனேகமாகக் காணாமல் போய் விட்டதோ!)

மூன்று நாட்கள் களை கட்டியிருக்கும் இந்தப் பொங்கல் கொண்டாட்டம் இன்று கனவு போல் இருக்கிறது. எங்கள் வீட்டில் எந்த ஊரில் இருந்தாலும் வாசலில் பொங்கல் வைப்பது தொடர்ந்தது. என் அம்மாவால் முடியாததால், இப்போது காஸ் அடுப்புப் பொங்கலாக மாறி விட்டது. ஆனால், தற்போது பெரும்பாலும் நகரங்களில் பொங்கல் கொண்டாட்டம் வீட்டின் உள்ளேயே முடிந்து விடுகிறது. இன்றையக் குழந்தைகள் நாங்கள் எல்லாம் சிறுவயதில் அனுபவித்த குதுகூலப் பொங்கல் கொண்டாட்டத்தை இழந்து விட்டார்களே என்ற ஆதங்கம்தான் மிஞ்சுகிறது...

Wednesday, 18 January 2012

தேங்காயாக இருந்து கொட்டாங்குச்சியாக மாறிய கிராமங்கள்...

இயற்கை விவசாய ஆர்வலர் திரு. நம்மாழ்வார் புதியதலைமுறை தொலைக்காட்சியில் சொன்ன ஒரு விசயம் எல்லோரையும் யோசிக்க வைக்கும். முன்பு 'தேங்காயாக இருந்த கிராமங்கள் இன்று கொட்டாங்குச்சியாக மாறி விட்டன' என்பதே அது. எத்தனை யதார்த்தமான விசயம்! மேலோட்டமாகப் பார்த்தால் இதில் என்ன அப்படி இருக்கு என்று நினைக்கத் தோன்றும். ஆனால், கூர்ந்து பார்த்தால் அதில் இயற்கையென்னும் யதார்த்தத்தைத் தொலைத்து விட்டு திக்குமுக்காடிக் கொண்டிருக்கும் மனித சமுதாய பாதிப்பு புரியும். இன்று விளை நிலங்கள் விஷ நிலங்களாக மாறி விட்டதுதான் யதார்த்தம். இரசாயன உரங்கள், கொடிய பூச்சி கொல்லி மருந்துகள் என பல ஊறு விளைவிக்கக் கூடிய விசயங்களைச் சார்ந்தே இன்றைய விவசாயம் இருக்கிறது. விளைபொருள் உற்பத்தி பெருகினாலும், இன்று நாம் பெரும்பாலும் உண்பது விஷ உணவுக்களைத்தான். இதன் தாக்கம் இன்று பல நோய்நொடிகள். இன்றும் பலர் தாங்கள் உண்பது விஷம் என்று அறியாமல் இருப்பது பரிதாபம்.

இயற்கைக்கு எதிரான நம் செயல்களின் பலனை இன்று நாமே சந்திக்க வேண்டிய கட்டாயம். பருவநிலை மாறுதல்கள், எதிர்பாரா இயற்கைப் பேரிடர்கள் என்று இயற்கை நமக்கு எதிராகத் திரும்பியது உண்மை. உஷ்ஷ்..ப்பப்பா என்ன வெயில் என்பவர்கள் அதற்குக் காரணம் இயற்கை அல்ல, இயற்கைக்கு எதிராக நாம் செய்த சதியின் பிரதிபலன்தான் என்பதை உணரவில்லை என்பதே கவலை தரும் விசயம். மரங்களினால் நமக்கு என்ன பயன் என்று அறியாமலே மரங்களை வெட்டிச்சாய்க்கும் பலர் இன்றும் உள்ளனர்.

இயற்கை விவசாயம் என்று பிரபலமாகப் பேசப்படும் இன்றைய விசயம் ஒன்றும் புதிது இல்லை. நம் முன்னோர்கள் செய்து கொண்டிருந்ததை இப்போது நாம் செய்ய முனைகிறோம். நாம் அன்றாடம் உட்கொள்ளும் காய்கறிகளின் மேல் பூச்சிகொல்லி மருந்து காணப்படுவது உண்மை. அதுதான் நல்லா கழுவி விடுகிறோமே என்பவர்களுக்கு ஒரு விசயம். தாவரங்கள் இத்தகைய விஷங்களை உட்கிரகித்து, அவை அவற்றுக்குப் பயன்படாததால் சேர்த்து வைத்து விடும். இதை நாம் கழுவி வெளியேற்ற முடியாது. பூச்சி கொல்லி மருந்துகள் எவ்வளவு விஷத்தன்மை கொண்டவை என்பதை அந்த மருந்துடன் வரும் விவரங்களைப் படித்தாலே தெரியும். மனித எண்ணிக்கை உயர்வு சார்ந்த உணவு உற்பத்திப் பெருக்கம் நோய்களை அதிகரித்திருப்பதுதான் வேதனை. இத்தகைய விஷங்கள் விளைநிலங்களைப் பாழ்படுத்துவது உண்மை. நாம் உண்ணும் உணவே விஷமாகி நம்மை அச்சுறுத்துகிறது...