hi friends...

welcome to my world....hope it makes your stay & reading enjoyable....

Wednesday, 7 August 2013

ஈகோ ....அப்படின்னா!!!

சில பல தெரிந்தவர்கள், நண்பர்கள் எல்லோரும் ஒரு பிரச்சனையில், ஈகோ பார்க்காதே...விட்டுக்கொடு என்று சொல்லி வந்தனர்...எனக்குப் புரியவில்லை! எந்த ஒரு விசயத்திலும் 'நான் தான்' என்ற மமதை என்றுமே பார்த்ததில்லை. ஒருவர் செய்வது எனக்கு உடன்பாடு இல்லையென்றால், சண்டை போடாமல் விலகிச் செல்வது எனது பழக்கம். ஒருவேளை, இதுவும் ஈகோ-வில் சேருமோ என்ற சந்தேகம் எனக்கு. அதிகம் பேசுவதில்லை, குறிப்பாக வீம்புக்கு வாக்குவாதத்தில் ஈடுபடுவோரிடம் பேசாமல் அமைதி காப்பதும் என் பழக்கம். இதுவும் ஈகோ-வா? பேசாமல் இருப்பவர்களில் இருவகை...ஒன்று, தரம் பார்த்து இவனிடம் நமக்கு என்ன பேச்சு என்ற மமதையில் இருப்போர்...இரண்டாவது, இயற்கையிலேயே யாரிடமும் அதிகம் பேசாமல் அமைதி காப்பவர்கள். இதில், நான் இரண்டாம் ரகம். இதில், என்ன வேடிக்கைன்னா, ஈகோ என்ற வார்த்தையைப் பயன்படுத்துற பலருக்கு, அதன் உண்மையான அர்த்தம் தெரிந்திருக்காது. ஈகோ என்ற வார்த்தையைப் பயன்படுத்திய ஒருவரே ஒருதடவை அதன் அர்த்தம் பற்றிக் கேட்ட வேடிக்கையும் உண்டு. சரி, தமிழ் அகராதியில் இதற்கான அர்த்தம் என்னவென்றுதான் பார்த்து விடுவோம் என்று முடிவெடுத்து தேடுதல் வேட்டை ஆரம்பித்தது...

Ego - 'நான்' என்னும் முனைப்பு

Ego     n. individual's perception or experience of himself,the I or self of any perosn, தான் என்னும் எண்ணம்;நான் என்னும் முனைப்பு; egocentric,a.selfcentred,egoistic, தன்முனைப்புள்ள; egoism,n .conceit, தன் முனைப்பு; systematic selfishness, தன்னல வேட்கை நெறி; egoist,n . தற்புகழ்ச்சியாளர்;தன்முனைப் பாளர்; egoistic al ,a . தன்முனைப்புள்ள;தற் பெருமை காட்டுகிற; egoistically,adv.egotheism,n . நானே கடவுள் எனல்; egotism,n .practice of talking about oneself, தற்பெருமை கூறுதல்; egotist,n .self-centred person, தற்பெருமையாளர்; egotistic (al) ,a . தற்பெருமை பேசுகிற;இறுமாப்பான; egotistically,adv.egotize v . தன்மை மிகுத்துப் பேசு. 

Egoism -  தன்னல வாழ்வைத்தவிர வேறொன்றும் இல்லை என்ற கோட்பாடு, தான் என்ற எண்ணம், தன்னலவேட்கை நெறி, தன்னலம், தன்னைத்தானே புகழ்ந்து பேசுதல்

திமிர் - arrogance   n. insolent pride, இறுமாப்பு, திமிர், அகந்தை; haughtiness, கர்வம்; arrogant,a.proud, தருக்கு நிறைந்த; haughty, திமிரான,கர்வம் மிகுந்த; behaving in a proud manner, திமிராக நடந்துகொள்கிற; arrogancy,n . தான்தோன்றித்தனம்; தன்முனைப்பு; arrogantly,adv. திமிராக.
(நன்றி: http://www.tamilvu.org/library/dicIndex.htm)

மேலே கொடுக்கப்பட்டுள்ளவற்றை வைத்துப் பார்த்தால், ஈகோ என்றால் 'நான்' என்ற அகந்தை, திமிர், இறுமாப்பு, ஆணவம், கர்வம் பார்ப்பது போன்றவற்றை பொதுவாகச் சொல்லலாம். மற்றபடி, தன்னலம், தற்பெருமை பேசுதல் போன்றவை எல்லாம் 'ஈகோ'-வில் சேருமா என்ற சந்தேகம்....ஏனென்றால், ஆங்கிலத்தில் இதற்குத் தனியா பெயர்கள் உண்டு. ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் ஈகோ-வுக்கு 'a person’s sense of self-esteem or self-importance' என்று கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு, சுயகவுரவம், கர்வம் என்றே எடுத்துக் கொள்ளலாம். 

ஆகையால், ஈகோ என்ற வார்த்தையை அதன் அர்த்தம் உணர்ந்து பொருத்தமான இடத்தில் பயன்படுத்தினால் நல்லது என்பதே என் தாழ்மையான கருத்து. உங்களுடைய கருத்து வேறுபட்டிருக்குமானால், தெரியப்படுத்துங்கள்...
 

Saturday, 28 July 2012

ஒலிம்பிக்ஸ்-திறமைசாலிகள் இங்கே...வாய்ப்பு எங்கே?

ஒலிம்பிக்ஸ் விளையாட்டுக்கள் தொடங்க கொஞ்சம் முன்னாடி, நாம சுதாரிச்சு வீரர்களை ஒரு வழியா தேர்வு பண்ணி (அதிலும் சிபாரிசுதான்!) அனுப்பிட்டு பதக்கம் கிடைக்குமா கிடைக்காதான்னு பதக் பதக்குனு இங்கன உக்கார்ந்துக்கிட்டு ஆருடம் சொல்லிட்டு போட்டிகள் முடிந்தவுடனே மறந்துட்டு வேற வேலையைப் பாக்கப் போயிருவோம் (பின்ன வேற வேல வெட்டி இல்லாமலா இருக்கோம்!!)..அடுத்த போட்டி வரும் வரை அதைப் பற்றி யோசிக்க நமக்கு ஏது நேரம்?...ஆனா, நான் யோசிச்சு யோசிச்சுப் பாத்ததுல (வீட்டுல உட்காந்துதான்...ரூம் போட்டு இல்ல), ஒரு விசயம் தெரிஞ்சது...போட்டில கலந்துக்கிறவங்க பெரும்பாலோனோருக்கு பதக்கத்த எப்படியாவது ஜெயிக்கனும்கிற வெறி இல்ல (அப்படி வெறி இருக்கிறவங்களதான் செலக்ட் செய்யமாட்டோம்ல!)...சும்மா ஊறு சுத்திட்டுதான் வாராங்க...மத்த நாடுகள்ள, ஒரு போட்டி முடிந்தவுடனே அடுத்த போட்டிக்கு வீரர்களைத் தயார் படுத்த ஆரம்பிச்சுறாங்க...ஆனா, இங்கன?...அடுத்த போட்டி தொடங்க கொஞ்சம் முன்னாடிதான் யோசிக்கவே ஆரம்பிப்போம்....இதுல விஷேசம் என்னன்னா, ஒவ்வொரு விளையாட்டுக்கும் உள்ள அமைப்பின் தலைமைல இருக்கிறவங்கள்ள முக்கால்வாசிக்கும் மேல சுறுசுறுப்பான 60 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள்தான்...சரி, நம்ம கதைக்கு வருவோம்..எப்படி போட்டில ஜெயிகிறது...எப்படி பதக்கத்த வாங்குறதுனு யோசிச்சப்ப (இந்த தடவ ரூம் போட்டுதான்!)...நாம நம்மிடையே உள்ள திறமையானவர்களை மதிக்கிறதே இல்லைன்னு தோணுது...அத மட்டும் நாம பயன்படுத்திக்கிடா எல்லாப் பதக்கமும் நமக்குதான்...

ஹாக்கி, புட்பால் என எல்லா விளையாட்டுலேயும் நளினம் போய் முரட்டுத்தனமா மாறிடுச்சு..நம்ம வீரர்களை மற்ற நாட்டு வீரர்களுக்குப் பக்கத்துல பாத்தா பாவமாத்தான் இருக்கு....நம்ம ஊர் சினிமால வருகிற வாட்டசாட்டமான் வில்லன் கோஸ்டிகள் எல்லாம் கண்ணுக்குத் தெரியலயா?...இவர்களைத் தயார் பண்ணி இந்த விளையாட்டுக்கள்ள விளையாடச் செய்தா ஒரு பய கிட்ட நெருங்க முடியுமா?...அதுமாதிரி, உயரம் தாண்டுதல்லுக்கு, நம்ம ஊர் கதாநாயன்களை அனுப்பலாம்ல?..எவ்வளவு உயரம்னா என்னா? சும்மா அனாசியமா தாண்டி பதக்கம் வாங்கிட மாட்டாங்க?கதாநாயகனோட ஒவ்வொரு அடியும் இடியா விழுது...குத்துச்சண்டைக்கு இதவிட என்ன தகுதி வேணும்?..ஒட்டப் பந்தயத்துக்கு பல தகுதியானவர்கள் இருக்காங்கப்பா...மக்கள ஏமாத்திட்டு தலதெறிக்க ஓடி காணாமல் போகிற சீட்டுக் கம்பனி ஆட்களின் சாமர்த்தியம், கதாநாயகனும் அவரை அடிக்கத் துரத்தும் வில்லன் கோஸ்டியும் சிலநிமிட நேரத்தில் பல மைல் ஓடும் சாகசம், நாய் துரத்த தலைதெறிக்க ஓடும் அப்பாவி கால்நடை வாசிகள்...கவட்டை வில்லால் குறிபார்த்து கரட்டாண்டி எனப்படும் ஓணானை அடிக்கும் சிறுவர்கள் குறிபார்த்து அம்பை எய்ய மாட்டார்களா என்ன? இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்..
இப்படி ஆட்களையெல்லாம் உட்டுட்டு....இந்த மாதிரி திறமையானவர்களையும் கொஞ்சம் கவனத்துல எடுத்துக்கிடனும்னு தாழ்மையுடன் கேட்டுக்கிறேங்க...

இத யார் மனதையும் புண்படுத்தனும்னு சொல்லலைங்கோ... திறமையானவர்கள் இருந்தும் பயிற்சிக்கான வாய்ப்பு, நவீன வசதி இல்லாமை; நேர்மையற்ற தேர்வுமுறை,வீரர்கள் எந்தக் கவலையும் இன்றி பயிற்சி செய்ய ஊக்கப்படுத்துதல், திறமை வாய்ந்தவர்களை இளம் வயதிலேயே அடையாளம் கண்டு அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி கொடுத்தல்...இதல்லாம் நடக்குமா என்ற ஆதங்கம்தான்..இத்தனை கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் ஒரு பதக்கம் பெற முக்கிமுனக வேண்டியிருப்பது அவலம்...சீன நாட்டினரால் சாதிக்க முடிந்ததை நம்மால் சாதிக்க முடியாதா என்ற ஆதங்கம்தான்....

Tuesday, 5 June 2012

உலகச் சுற்றுச்சூழல் தினம்...நாம் என்ன செய்தோம்?

இன்று உலகச் சுற்றுச்சூழல் தினம்...நம் ஆரோக்கிய வாழ்க்கைக்கு சுற்றுச்சூழல் எவ்வளவு முக்கியம் என்பது தெரியாமலேயே பலர் அலட்டியம் காட்டுகின்றனர். சூழலுடன் இணைந்த வாழ்க்கை என்பது காணாமல் போய் விட்டது. இயற்கையை அழித்து இயற்கைக்கு மாறாக நாம் வாழ ஆரம்பித்து விட்டோம். அதன் விளைவுகள் பலவிதத்தில் நம்மைத் தாக்க ஆரம்பித்து விட்டன. 


மரங்களினால் என்ன பயன் என்று கேட்டால் நிச்சயமாக பல பேர் சரியான பதில் சொல்ல மாட்டார்கள். மரங்கள் வெட்டப்படும் போது ஏனோ என் மனம் கனத்துப் போகிறது. மரங்கள் நம் இயற்கைக்கு மாறான செயல்களால் வெளிப்படும் கரியமிலவாயுவை கிரகித்து அதை கார்பனாக மாற்றி தன் உடலில் சேமிப்பதோடு, தூய பிராணவாயுவை நமக்காக வெளிவிடுகிறது. பெரும்பாலான காடுகள் அழிக்கப்பட்டதால், இன்று கரியமில வாயுவின் அளவு அதிகரித்து உலக உஷ்ணமயமாதலைப் பற்றி பேசிக்கொண்டுருக்கிறோம். தன்னலமில்லாமல் நமக்காக நன்மை செய்யும் மரங்களை வெட்டுவது பாவச்செயல்தானே?


இந்த கரியமிலவாயுவை காற்று மண்டலத்தில் இருந்து நீக்குவதில் பெரும் பங்கு வகிப்பது கடல். ஆனால், நாம் நிலத்தில் ஏற்படுத்தும் மாசுகள் நேரடியாகக் கடலைச் சென்று அடைவது எத்தனை பேருக்குத் தெரியும்? நாம் வீசி எரியும் பாலிதீன் பைகளை உணவாக நினைத்து உண்டு மாண்டு போகும் கடல் உயிரினங்கள் எத்தனை தெரியுமா?


உலகில் வசிக்கும் அனைத்து உயிரினங்களும் (நம்மையும் சேர்த்துத்தான்) ஒன்றொடு ஒன்று தொடர்புடையது. உணவுச் சங்கிலி என்ற பிணைப்பில் அவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. இதில் பங்கேற்கும் ஒன்றுக்கு பாதிப்பு என்றால் கூட அதைச் சார்ந்த மற்ற உயிரினங்களும் பாதிக்கப்படும்.

உணவு உற்பத்திப் பெருக்கம் என்று சொல்லி உணவு, மண் இரண்டும் விசமாகிப் போனதுதன் நிஜம். நம் முன்னோர்கள் செய்த இயற்கை விவசாயத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம். இன்று மினரல் வாட்டர் பிரபலமானதுக்குக் காரணம் என்ன?


சரி...இதெல்லாம் நாமா செய்றோம்...நம்மால் என்ன பண்ண முடியும் என்று நினைக்காமல் நீங்களும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பங்கேற்க முடியும்...பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்களை சாலைகளில் போடுவதைத் தவிர்க்கலாம். உபயோகிக்கும் நீரை சிக்கனப் படுத்தலாம். அநாவசிய மின்சார உபயோகத்தைத் தவிர்க்கலாம்...இன்று ஒரு மரக்கன்றை வீட்டருகில் நட்டு நீங்களும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பங்கேற்கலாமே? குழந்தைகளுக்கு குப்பைகளை குப்பைத்தொட்டியில் போடும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள்...நம் வீட்டுச் சூழலை ஆரோக்கியமாக வைத்தாலே பெரிய சாதனைதானே?

உங்களால் முடிந்த ஏதாவது ஒன்றை இன்று செய்யலாமே?

Thursday, 19 January 2012

காணாமல் போய்க்கொண்டிருக்கும் குதுகூலப் பொங்கல்....

பொங்கலோ பொங்கல் என்று குதுகூலமாகக் கொண்டாடிய நாட்கள் நினைவில் வந்து போகின்றன. பொங்கல் வந்து விட்டாலே வீடு களைகட்டி விடும். ஒரு மாதம் முன்பே வெள்ளையடிப்பு நடக்கும். வீட்டு சாமான்கள் ஒதுங்க வைக்கப்பட்டு சுத்தம் செய்யப்படும் போது மறந்து போன விளையாட்டுச் சாமான்கள், இதர பொருட்கள் மாட்டும் போது கிடைக்கிற சந்தோஷம்...ஆகா..அனுபவித்தால்தான் தெரியும்...

அது போல், பொங்கலுக்கு முதல் நாள், வாசலில் செம்மண் கோலம் போட்டு அதற்கு பார்டராக சுண்ணாம்பு அல்லது கோலப்போடி போடுவதும், யார் வீட்டுக் கோலம் நல்லா இருக்குங்கிற போட்டியும் பொங்கலுக்கு சுருதி சேர்க்கும். பொங்கல் சாமான்கள் வாங்க சந்தைக்குப் போய் பேரம் பேசி வாங்குவது சுவாரசியம். பொங்கல் அன்று அதிகாலையிலேயே வீடும் தெருவும் களை கட்டி விடும்..அக்கா உங்க வீட்டுல பொங்கல் பொங்குச்சா என்ற பாசமான அக்கம் பக்கத்து வீட்டு விசாரிப்புகள்...(இப்போ எல்லாம் இப்படி விசாரிக்கிறாங்களா?...அக்கம்பக்கதுல யார் இருக்காங்க என்கிறதே பெரும்பாலும் தெரியாமல் போய் விட்டதே...பின் எங்கிருந்து விசாரிக்க!!)

 சூரிய உதயத்தின் போது பூசை நடக்கும். மதியம் பொங்கல் சோறு, சர்க்கரைப் பொங்கல், பல்வகை காய்கறிகள்...சுவையோ சுவை. அடுத்த நாள் மாட்டுப் பொங்கல். வீட்டில் உள்ள மாடுகளுக்குக் கொண்டாட்டமான ஒரே நாள். மாடுகள் குளிப்பாட்டப்பட்டு, அலங்கரிக்கப் பட்டு, பூஜிக்கப்பட்டு, திருஷ்டி கழிக்கப்பட்டு...ஒரே ராஜ உபச்சாரம்தான்.

அடுத்தது, சிறுவீட்டுப் பொங்கல். செம்மண்ணில் காம்பவுண்டுடன் வீடு அமைக்கப்பட்டு பொங்கல் வைக்கப்படும். வாண்டுகளுக்கு உகந்த பொங்கல் இது..(இந்தப் பொங்கல் அனேகமாகக் காணாமல் போய் விட்டதோ!)

மூன்று நாட்கள் களை கட்டியிருக்கும் இந்தப் பொங்கல் கொண்டாட்டம் இன்று கனவு போல் இருக்கிறது. எங்கள் வீட்டில் எந்த ஊரில் இருந்தாலும் வாசலில் பொங்கல் வைப்பது தொடர்ந்தது. என் அம்மாவால் முடியாததால், இப்போது காஸ் அடுப்புப் பொங்கலாக மாறி விட்டது. ஆனால், தற்போது பெரும்பாலும் நகரங்களில் பொங்கல் கொண்டாட்டம் வீட்டின் உள்ளேயே முடிந்து விடுகிறது. இன்றையக் குழந்தைகள் நாங்கள் எல்லாம் சிறுவயதில் அனுபவித்த குதுகூலப் பொங்கல் கொண்டாட்டத்தை இழந்து விட்டார்களே என்ற ஆதங்கம்தான் மிஞ்சுகிறது...

Wednesday, 18 January 2012

தேங்காயாக இருந்து கொட்டாங்குச்சியாக மாறிய கிராமங்கள்...

இயற்கை விவசாய ஆர்வலர் திரு. நம்மாழ்வார் புதியதலைமுறை தொலைக்காட்சியில் சொன்ன ஒரு விசயம் எல்லோரையும் யோசிக்க வைக்கும். முன்பு 'தேங்காயாக இருந்த கிராமங்கள் இன்று கொட்டாங்குச்சியாக மாறி விட்டன' என்பதே அது. எத்தனை யதார்த்தமான விசயம்! மேலோட்டமாகப் பார்த்தால் இதில் என்ன அப்படி இருக்கு என்று நினைக்கத் தோன்றும். ஆனால், கூர்ந்து பார்த்தால் அதில் இயற்கையென்னும் யதார்த்தத்தைத் தொலைத்து விட்டு திக்குமுக்காடிக் கொண்டிருக்கும் மனித சமுதாய பாதிப்பு புரியும். இன்று விளை நிலங்கள் விஷ நிலங்களாக மாறி விட்டதுதான் யதார்த்தம். இரசாயன உரங்கள், கொடிய பூச்சி கொல்லி மருந்துகள் என பல ஊறு விளைவிக்கக் கூடிய விசயங்களைச் சார்ந்தே இன்றைய விவசாயம் இருக்கிறது. விளைபொருள் உற்பத்தி பெருகினாலும், இன்று நாம் பெரும்பாலும் உண்பது விஷ உணவுக்களைத்தான். இதன் தாக்கம் இன்று பல நோய்நொடிகள். இன்றும் பலர் தாங்கள் உண்பது விஷம் என்று அறியாமல் இருப்பது பரிதாபம்.

இயற்கைக்கு எதிரான நம் செயல்களின் பலனை இன்று நாமே சந்திக்க வேண்டிய கட்டாயம். பருவநிலை மாறுதல்கள், எதிர்பாரா இயற்கைப் பேரிடர்கள் என்று இயற்கை நமக்கு எதிராகத் திரும்பியது உண்மை. உஷ்ஷ்..ப்பப்பா என்ன வெயில் என்பவர்கள் அதற்குக் காரணம் இயற்கை அல்ல, இயற்கைக்கு எதிராக நாம் செய்த சதியின் பிரதிபலன்தான் என்பதை உணரவில்லை என்பதே கவலை தரும் விசயம். மரங்களினால் நமக்கு என்ன பயன் என்று அறியாமலே மரங்களை வெட்டிச்சாய்க்கும் பலர் இன்றும் உள்ளனர்.

இயற்கை விவசாயம் என்று பிரபலமாகப் பேசப்படும் இன்றைய விசயம் ஒன்றும் புதிது இல்லை. நம் முன்னோர்கள் செய்து கொண்டிருந்ததை இப்போது நாம் செய்ய முனைகிறோம். நாம் அன்றாடம் உட்கொள்ளும் காய்கறிகளின் மேல் பூச்சிகொல்லி மருந்து காணப்படுவது உண்மை. அதுதான் நல்லா கழுவி விடுகிறோமே என்பவர்களுக்கு ஒரு விசயம். தாவரங்கள் இத்தகைய விஷங்களை உட்கிரகித்து, அவை அவற்றுக்குப் பயன்படாததால் சேர்த்து வைத்து விடும். இதை நாம் கழுவி வெளியேற்ற முடியாது. பூச்சி கொல்லி மருந்துகள் எவ்வளவு விஷத்தன்மை கொண்டவை என்பதை அந்த மருந்துடன் வரும் விவரங்களைப் படித்தாலே தெரியும். மனித எண்ணிக்கை உயர்வு சார்ந்த உணவு உற்பத்திப் பெருக்கம் நோய்களை அதிகரித்திருப்பதுதான் வேதனை. இத்தகைய விஷங்கள் விளைநிலங்களைப் பாழ்படுத்துவது உண்மை. நாம் உண்ணும் உணவே விஷமாகி நம்மை அச்சுறுத்துகிறது...

Wednesday, 28 September 2011

இதய நாள்...செப்டம்பர் 29ம் தேதி....உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில்..

இதய நாள்...

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 29ம் தேதி இதய நாளாக அனுசரிக்கப்படுகிறது.....

இதயம் மற்றும் அதைச் சார்ந்த இழுப்பு நோய்களால் ஆண்டு தோறும் சுமார் 173 லட்சம் மக்கள் இறந்து போவதாகக் கணிக்கப்பட்டுள்ளது. நமக்கு நாமே எதிரி என்றால் அது மிகையாகாது. ஏனென்றால், இதயம் மற்றும் அதைச் சார்ந்த இழுப்பு நோய்கள் அதிகரிக்கக் காரணம் நம்முடைய வாழ்முறை மாற்றம்தான். இந்த நோய்கள் ஏற்படக் காரணமாக இருப்பவை அதிக இரத்த அழுத்தம், இரத்தத்தில் அதிக அளவு கொழுபு மற்றும் சர்க்கரை, புகை பிடித்தல், காய்கறிகளை அறவே ஒதுக்குதல், தேவைக்கதிக உடல் எடை, உடல் மருமன், மன உழைச்சல் மற்றும் உடல் உழைப்பு இல்லாமை.

கைமுட்டி அளவே இருந்தாலும், நம் உடல் பாகங்களிலேயே வலுவான சதை அமைப்பைக் கொண்டது இதயம். நிமிடத்திற்கு சுமார் 70 முறை துடிக்கும் இதயம், உடலின் அனைத்து பாகங்களுக்கும் பிராணவாயு மற்றும் சத்துக்களை எடுத்துச் செல்கிறது. உடல் உழைப்புக்கு ஏற்ப துடிக்கும் வேகம் அதிகரிக்கும்.

இந்த இதயம் சம்பந்தமான நோய்களுக்கு இப்பொழுதெல்லாம் ஏழை பணக்காரன் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. ஆனால், வருமுன் நம்மைக் காத்துக் கொள்ள முடியும். கிட்டத்தட்ட 80 சதவிகிதம் அளவுக்கு தற்காத்துக் கொள்ள முடியும். இதற்கு என்ன செய்யலாம்? சத்தான ஆரோக்கியமான உணவு, தினப்படியான உடற்பயிற்சி மற்றும் புகையிலை சார்ந்த பொருட்களை உபயோகிக்காமை ஆகியவை நிச்சயம் தற்காத்துக் கொள்ள உதவும். இதில், புகையிலை சார்ந்த பொருட்கள், உதாரணமாக சிகரட் புகைத்தல், அருகில் இருப்பவர்களையும் பாதிக்கும் என்பதுதான் நிதர்சன உண்மை. புகை பிடித்தல் இதய நோயின் வேகத்தைப் பலமடங்கு அதிகரிக்கும்.

கரோனரி ஆர்ட்டரி என்ற இரத்தக் குழாய் மூலம் இதயத் தசைகளும் பிராணவாயு மற்றும் சத்துக்களைப் பெறுகின்றது. இதயத்திற்கு செல்லும் இரத்தம் அடைப்பினால் தடைப்படும் போது, இதயத்திற்கு செல்லும் பிராணவாயு மற்றும் சத்துக்கள் அளவு குறைந்து பாதிப்பு ஏற்படுகிறது. இதன் உடனடி நிகழ்வுதான் மாரடைப்பு. இந்தத் தடை குறைந்த அளவில் இருந்து, இதயத்திற்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறந்தால், 'ஆஞ்சினா' என்ற நெஞ்சு வலி ஏற்படும். மாரடைப்பு வருவதற்கான முன்னறிவிப்பாகவே இதை எடுத்துக் கொள்ளலாம். இதே இரத்த ஓட்டத்தடை மூளையில் ஏற்படுமானால், மூளைப்பகுதி செயலிழந்து இழுப்பு ஏற்படுகிறது. இதை உடனடியாகக் கவனித்து மருத்துவ உதவி அளித்தால், அதிகளவிலான பாதிப்பைத் தடுக்கலாம். உயர் இரத்த அழுத்தமும் மூளையில் உள்ள இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்து பாதிப்பை ஏற்படுத்தும்.

வாழ்முறை மாற்றம் நம் ஆரோக்கியத்திலும் மாற்றத்தை, பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வாகனவசதி நாம் அழுங்காமல் சென்று வர உதவி செய்து கூடவே நம்மையறியாமல் நோய்நொடிகளையும் கொண்டு வருகிறது. உடல்பயிற்சி என்பதே இல்லாமல் போய் நடப்பதே உடற்பயிற்சியாகி விட்டது. இன்றைய குழந்தைகள் விளையாடக் கூட நேரம் இல்லாமல் படிப்பதால், உடல் பருமானகி இளம் வயதிலேயே நோய்களுக்கு வித்திடுகின்றனர். 

தொத்து அல்லாத வாழ்முறை நோய்கள் இன்றளவில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, சர்க்கரை நோய், புற்று நோய் இவற்றுடன் இதய நோய்களும் அடங்கும். சர்க்கரை நோய் இருப்பவர்கள் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருப்பது மிக அவசியம். இவர்கள், இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் நல்லது.

தொழில்நுட்பம் எவ்வளவு மாறினாலும், மாரடைப்பு ஏற்படும் பொழுது அதற்கான நோய்க்குறிகளை அடையாளம் காணத்தெரியாமல் இருப்பது வருத்தத்தக்கது. மாரடைப்புக்கான நோய்க்குறிகளில் நடுநெஞ்சில் வலி/அழுத்தம், அதிக வேர்வை, தோள்பட்டைகளில் வலி/உழைச்சல், தாடை வலி, மூச்சு விடுவதில் சிரமம், வாந்தி போன்றவை முக்கியமானவை. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு வலி தெரியாமல் போகலாம். வயிற்றுக் கோளாருக்கும் (வாந்தி, நெஞ்செரிச்சல் போன்றவை) மாரடைப்புக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மருத்துவரால் மட்டுமே இனம் காண முடியும். அதே மாதிரி, மூளை பாதிப்பில் கவனிக்க வேண்டியது, பேச்சு, புரிதலில் குழப்பம், நடையில் தடுமாற்றம், மயக்கம், உடல்பாகங்கள் மறத்துப் போதல் போன்றவை. பாதிக்கப்பட்ட நபர்களை உடனடியாக மருத்துவமனை கொண்டுசெல்ல வேண்டியது அவசியம். 

இந்தக் கட்டுரை உங்களைப் பயமுறுத்த அல்ல. உங்களிடம் ஒரு விழிப்புணர்வைக் கொண்டு வருவதற்கே. உங்களுக்குத் தெரியவேண்டும் என்றுதான் இந்த விபரங்கள். பயந்து விடாதீர்கள், அதே சமையம், அலட்சியமாகவும் இருந்து விடாதீர்கள். இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க நீங்கள் இமயமலையைப் பிரட்ட வேண்டியதில்லை. உங்கள் வாழ்முறையில் ஒருசில சிறிய மாற்றங்கள் செய்தால் போதும். ஆரோக்கியமான இதயத்துடன் உற்சாகமாக வாழலாம். சரி, என்ன அப்படி ஒருசில சிறிய மாற்றங்கள்?

தினமும் 30 நிமிடங்களாவது வேர்க்கவிருவிருக்க உடற்பயிற்சி செய்யவேண்டும். அல்லது, காலை அல்லது மாலை வேலைகளில் அரை மணி நேர வேகநடை போதும்.

உடல் எடையில் கவனம் தேவை. உடல் எடையை சீராக வயது, உயரத்திற்குத் தகுந்தவாறு பேணி வர வேண்டும். அதே சமயம், எடையைக் குறைக்கிறேன் என்று ஆரோக்கியமான் உணவைத் தவிர்ப்பது உடலுக்குத் தீங்கை விளைவிக்கும். உடல் பருமன் பற்றிய என்னுடைய செய்தியை இதே பகுதியில் படித்துப் பாருங்கள்.


அதிகக் கொழுப்பு நிறந்த உணவுகளைத் தவிர்த்தல் மிகவும் நல்லது. வயது அதிகரிக்கும் போது, மாமிச உணவுகளைக் குறைத்து வருவது நல்லது. அதற்குப் பதில் மீன் போன்றவற்றை குறிப்பாகக் கடல் உணவுகளைச் சேர்த்துக் கொள்ளலாம்.
 
எண்ணையில் ஆழ்ந்து வறுத்தெடுக்கப்பட்ட பதார்த்தங்களை அறவே தவிர்த்தல் நல்லது.
 
தினமும் குறிப்பிட்ட அளவில் காற்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்
 
சாப்பிட்டவுடன், குளிர்ந்த பானங்களைக் குடிப்பது தவறு. அதிகக் கொழுப்பு குடலில் இருந்து உறிஞ்சப்படக் காரணமாகிவிடும்

இதயத்திற்கு மிகப்பெரிய எதிரி நாம் உணவில் சேர்த்துக் கொள்ளும் உப்பு. உப்பு குறிப்பிட்ட அளவில் நமக்குத் தேவை. உணவு செய்முறையில் சேர்க்கப்படும் அளவான உப்பே நமக்குப் போதும். அதிகளவிலான உப்பு வில்லங்கத்தில்தான் முடியும்.

மன உழைச்சல் நம் ஆரோக்கியத்தில் மிகப்பெரும் பங்கு வகிக்கிறது. இதய நோய்களிலும் இதன் பங்கு முக்கியம். இன்றைய காலகட்டத்தில், இதற்கான வாய்ப்புகள் அதிகம். மனம் விட்டு யாரிடமாவது பேசுவது, தியானம் போன்றவற்றால் இதன் பாதிப்பைக் குறைக்கலாம். 

பூண்டு ஒரு சிறந்த மருத்துவப் பொருள். பச்சையாக சில பூண்டு பற்களை மென்று சாப்பிட்டு வந்தால் நல்லது. இல்லையென்றால், கொதிக்க வைத்து இறக்கிய பாலில் 10 பூண்டு பற்களைப் போட்டு மூடி வைத்தால், பால் ஆறும்போது அதிலுள்ள பூண்டும் நன்கு வெந்திருக்கும். பூண்டை சாப்பிட்டு பாலையும் குடித்து விடவேண்டும். மாதம் இருமுறை சாப்பிட்டால் போதும். இரத்த அழுத்தம் மற்றும் இரத்ததில் அதிகக் கொழுப்பு சேருவதைக் கட்டுப்படுத்தலாம்.

இதுவரை நீங்கள் உங்கள் உடல் நலனில் அக்கறை காட்டவில்லையெனில்... இனியாவது முயற்சி செய்யுங்கள்...வாழும்வரை ஆரோக்கியமாக வாழலாமே!

Monday, 5 September 2011

சுமைதாங்(தூக்)கிகள்....

காலத்தின் கோலம் கல்வியின் கட்டாயம்!
தொலைந்தது குழந்தைப்பருவம்
மிஞ்சியது புத்தகப் பழு!
சிந்திக்கும் சீரிளந்திறன்
தொலைந்தது மதிப்பெண் மோகத்தால்!
வளர்ந்தபின் திரும்பினால்
காணாமல் போனது காலம் மட்டுமல்ல
குழந்தைப்பருவக் குதுகூலமும்தான்!
அன்று தொலைத்ததை 
இன்று தேடுமுன்!
வாழ்க்கையை சுமக்கும் தூண்களாகமீண்டும் சுமைதாங்(தூக்)கிகளாக!